Saturday 20 August 2011


மன்னிப்பு என்பது...



மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் 
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு 
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது 
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை 
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது 
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை 
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது 
படுக்கையறையில்
மண்டியிடுதல் 
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் 
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் 
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது 
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி 
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது 
தண்டனையை
ஒத்தி வைப்பது 
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு 
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது 
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது 
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது 
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது 
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது 
மறதியின்
இன்னொரு பெயர் 
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் 
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது 

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீ ர்த்துளி
மட்டுமே என்று!

No comments:

Post a Comment